கோலாலம்பூர்: அமைச்சரவைக் கூட்டத்திற்கு முந்தைய சந்திப்புக்காக நேற்று மாமன்னரை பிரதமர் முகைதீன் யாசின் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த நேரடிச் சந்திப்பு காலை 8.30 மணிக்குத் தொடங்கி ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நடவடிக்கைகளை அம லாக்குவது குறித்து இருவரும் ஆலோசித்ததாக இஸ்தானா நெகாரா நிர்வாகி அகமட் ஃபாடில் சம்சுதீன் சொன்னார்.
மாமன்னர் சுல்தான் அப்துல்லா ரியாதுடினும் பிரதமர் முகைதீன் யாசினும் நேருக்கு நேர் சந்திப்பது இது இரண்டாவது முறை என்று பெர்னாமா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு மார்ச் 18ஆம் தேதி மாமன்னரும் பிரதமரும் நேரடியாகச் சந்தித்தனர். கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி காணொளி வழியாகவும் இருவரும் சந்தித்துள்ளனர்.
இந்த சமயத்தில் அரண்மனையில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கிருமி தொற்றியதால் மாமன்னரும் அரச குடும்பத்தினரும் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
இவ்வாண்டு ஜூன் 4ஆம் தேதியன்றும் இருவரும் காணொளி வழியாக ஆலோசனை நடத்தியதாக திரு அகமட் ஃபாடில் சம்சுதீன் குறிப்பிட்டார்.

