கோலாலம்பூர்: ஆளும் கூட்டணிக் கட்சிகளின் மறுசீரமைப்புக்காக மலேசிய பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் பதவி விலகுவது தொடர்பான ஒலிப்பதிவு ஒன்று சமூக ஊடகங்களுக்குக் கசிந்துள்ளது.
பிப்ரவரி மாதம் 23ஆம் தேதியன்று நடந்த பெர்சத்து கட்சியின் உச்ச மன்றக் கூட்டத்தில் நடந்த கலந்துரையாடலைக் கொண்ட அந்த ஒலிப்பதிவில், ஒரு மூத்த பெர்சத்து தலைவரின் குரல் ஒலிக்கிறது. கட்சிகளின் மறுசீரமைப்புக்காக இரு வேறுபட்ட சூழல்களைப் பற்றி அந்தக் குரல் கூறுவதாக அமைந்துள்ளது.
இரு சூழல்களிலும் பிரதமர் பதவி விலகத் தேவையில்லை என்றும் கூறப்பட்டது. இதற்குமுன் பிரதமர் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக விலக வேண்டியிருந்ததாக டாக்டர் மகாதீர் கூறியிருந்தார். பெர்சத்து கட்சியின் ஆதரவை இழந்ததாலும் முன்னாள் எதிர்க்கட்சியான அம்னோவை முழுமையாக ஏற்றுக்கொள்ள விரும்பாததாலும் இந்த நிலை தமக்கு நேர்ந்துள்ளதாக அவர் சுட்டினார்.
பிப்ரவரியில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் வீழ்ச்சிக்கு முன் நடந்த பெர்சத்து உச்ச மன்றக் கூட்டத்தில் பேசப்பட்டதை கொண்ட மூன்றாவது ஒலிப்பதிவு கசிவு இது என்று 'மலேமெய்ல்' செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

