கில்லினா: பிறந்தவுடன் பெற்ற தாயால் கைவிடப்பட்ட இந்த சிங்கக்குட்டியின் பெயர் 'ஓயிட் கிங்'. ஸ்பானிய விலங்கியல் தோட்டத்தில் பிறந்த முதல் வெள்ளை சிங்கம் இது. கிட்டத்தட்ட 14, 15 நாட்களாக பிரசவ வலியுடன் இருந்ததால் சிங்கக்குட்டியைப் பெற்றெடுத்த உடனே அதை அரவணைக்காமல் தள்ளிச் சென்றுவிட்டது அதன் தாயார். பிறந்த முதல் மூன்று நாட்களாக அந்தக் குட்டி எதையுமே சாப்பிடவில்லை.
தாய் சிங்கம் அதன் குட்டியைக் கவனிக்காததை அறிந்ததும் விலங்கியல் தோட்ட ஊழியர்கள் அந்தக் குட்டியைத் தனியே எடுத்து அதன் உடல்நிலையைக் கண்காணித்து அதைத் தேற வைத்தனர்.
பாசம் காட்ட தாய் சிங்கம் இல்லையென்றாலும் மே 31ஆம் தேதியன்று பிறந்த இந்தக் குட்டிக்கு பல மனித தாய்கள் உள்ளனர். நேரம் வரும்போது பெற்றோருடன் இந்தச் சிங்கக்குட்டி மீண்டும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'ஓயிட் கிங்'கை சேர்த்து சுமார் 3,000 விலங்குகளைக் கொண்ட மண்டோ பார்க் விலங்கியல் தோட்டம், மூன்று மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது.

