மலேசியாவில் மேலும் 33 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று

மலேசியாவில் மேலும் 33 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று

2 mins read
fc5ab892-783a-43bc-888d-f7ca664c3e46
கொரோனா கிருமித்தொற்றால் புதிதாக எந்த ஒரு பாதிப்பும் இல்லாத இடங்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கு மட்டுமே வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தேசிய பள்ளிவாசல். படம்: யூசோப் மாட் இசா -

கோலாலம்பூர்: மலேசியாவில் மேலும் 33 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,402ஆக அதிகரித்துள்ளது.

கிருமித்தொற்று காரணமாக மலேசியாவில் மேலும் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்றால் மலேசியாவில் இதுவரை 119 பேர் மாண்டுவிட்டனர்.

நேற்று முன்தினம் 31 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமையிலிருந்து புதன்கிழமை வரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு மலேசியாவில் உள்ள பல பள்ளிவாசல்கள் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக திறக்கப்பட்டன.

கொரோனா கிருமித்தொற்றால் புதிதாக எந்த ஒரு பாதிப்பும் இல்லாத இடங்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கு மட்டுமே வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்களில் மூன்றில் ஒரு பரப்பளவை மட்டும் வழிபாடு செய்ய வருவோருக்குத் திறந்துவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலுக்கு இறை வழிபாடு செய்ய வருவோர் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும்.

இரண்டிலிருந்து மூன்று மீட்டர் பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அதிகபட்சம் 40 பேருக்கு மட்டுமே பள்ளிவாசலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா கிருமித்தொற்றால் எந்த ஒரு பாதிப்பும் இல்லாத இடங்களில் உள்ள முஸ்லிம் அல்லாத பிற சமயங்களின் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது.

வழிபாட்டுத் தலங்களின் பரப்பளவைப் பொறுத்து உள்ளே சென்று வழிபட அதிகபட்சமாக 30 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்று காரணமாக மலேசியாவின் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களில் தியோமான் தீவும் ஒன்றும்.

சுற்றுப்பயணிகளின் வருகை இல்லாததால் அங்கு இருக்கும் ஆகப் பெரிய ஹோட்டலான பெர்ஜயா தியோமான் ரிசோர்ட்

இம்மாதம் 15ஆம் தேதியுடன் மூடுகிறது. புதுப்பிப்புப் பணிகளுக்குப் பின் அது மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்்பட்டது.