அமெரிக்காவில் கொவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி நடைமுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்கப் பொருளியல் படிப்படியாக செயல்படத் தொடங்கியுள்ள வேளையில், நோய்த்தொற்று அலை மீண்டும் எழக்கூடிய அபாயம் நிலவுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
நோய்த்தொற்று மீண்டும் தலைதூக்கினால் மாநிலங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்த வேண்டியிருக்கும் என்று அமெரிக்க தொற்றுநோய் கட்டுப்பாடு, தடுப்பு நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவில் பொருளியல் நடவடிக்கைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள வேளையில் டெக்சஸ், அரிஸோனா, ஃபுளோரிடா உள்ளிட்ட பல மாநிலங்கள் அண்மைய காலமாக சமூக இடைவெளி நடைமுறைகளைத் தளர்த்தியுள்ளன.
மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவதும் பல மாநிலங்களில் கட்டாயமாக்கப்படவில்லை.