பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் புதிதாக கொவிட்-19 நோய்த்தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நகரின் மொத்த விற்பனைச் சந்தை ஒன்றும் 11 குடியிருப்புப் பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளன.
பெய்ஜிங்கில் மீண்டும் தொற்று அலை எழக்கூடிய அச்சம் ஏற்பட்டு உள்ள வேளையில், அந்த நகரில் உள்ள மாவட்டம் ஒன்று போர்க்கால அடிப்படையில் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த மாவட்ட அதிகாரி ஒருவர் கூறினார்.
ஃபெங்தாய் எனும் அந்த மாவட்டத்தில் உள்ள மொத்த விற்பனைச் சந்தையில் நோய் பரவியது கண்டறியப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 517 பேரில் 45 பேருக்கு கொவிட்-19 உறுதிசெய்யப்பட்டிருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார். அவர்களில் எவருக்கும் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை.
நேற்று முன்தினம் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட ஆறு நோயாளிகளும் அந்த மொத்த விற்பனைச் சந்தைக்குச் சென்றிருந்ததாக பெய்ஜிங் நகர பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து பெய்ஜிங்கில் விளையாட்டு நிகழ்வுகளும் சுற்றுப்பயணத் துறை நடவடிக்கைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளை நாளை மீண்டும் திறக்கும் திட்டமும் இப்போதைக்கு கைவிடப்பட்டுள்ளதாக பெய்ஜிங் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சந்தையில் இருந்த சுமார் 10,000 பேர் கிருமித்தொற்று பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர். பெய்ஜிங்கில் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சீனாவில் நேற்று முன்தினம் 11 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. அதுபோக, கொவிட்-19 உறுதிசெய்யப்பட்ட மற்ற எழுவரிடம் அறிகுறிகள் தென்படவில்லை. உள்ளூரில் பதிவான அனைத்து சம்பவங்களும் பெய்ஜிங்கில் உறுதிசெய்யப்பட்டவை.