அட்லாண்டா: அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ஒரு கறுப்பின ஆடவர், போலிஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராய்ஷார்டு புரூக்ஸ் எனும் 27 வயது இளைஞர் வெண்டி துரித உணவகம் முன்பு, வாகன நிறுத்துமிடத்தில் காரில் அமர்ந்தவாறே தூங்கியுள்ளார்.
இதனால் பாதை தடைப்பட்டதாக அங்கிருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் போலிசார், புரூக்சை கைது செய்ய முயன்றனர்.
அதற்கு உடன்பட மறுத்த அவர் போலிசார் வைத்திருந்த டேசர் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தப்ப முயன்ற நிலையில், இன்னோர் போலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த புரூக்ஸ், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, வெண்டி'ஸ் ரெஸ்டாரண்ட் என்னும் உணவகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீக்கிரையாக்கினர்.
ஏற்கெனவே ஜார்ஜ் ஃபிளாயிட் படுகொலையால் வெடித்த போராட்டங்களே இன்னும் அடங்காத நிலையில், மற்றொரு கறுப்பின இளைஞரும் கொல்லப்பட்டதால் அட்லாண்டாவில் போராட்டம் வெடித்துள்ளது.
இதனிடையே இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று அட்லாண்டா நகரின் போலிஸ் தலைமை அதிகாரி பதவி விலகினார். இளைஞரை சுட்டுக் கொன்ற அதிகாரியும் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

