அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்து வருவதையடுத்து, வேலைவாய்ப்பை உள்நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கில் எச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்திவைத்து அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
எச்-1பி விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் உத்தரவு நாளை (ஜூலை 24) முதல் நடைமுறைக்கு வருகிறது.
எச்-1பி விசா மூலம் பெரும்பாலும் இந்தியா, சீனாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள்தான் அதிகமாக அமெரிக்க நிறுவனங்களுக்குப் பணிக்குச் செல்கின்றனர்.
இந்த விசா வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளதால் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே விசா பெற்றவர்களும் இந்த ஆண்டு இறுதிவரை செல்ல முடியாத சூழல் ஏற்படும்.
கடந்த ஆண்டு அமெரிக்கா வழங்கிய 188,123 எச்-1பி விசாக்களில் 131,549 இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக 28,483 விசாக்கள் சீன நாட்டவருக்கு வழங்கப்பட்டது.
இந்த உத்தரவின் மூலம் அமெரிக்காவுக்குள் வேலைக்காக எச்-1பி, எச்-2பி, எல் விசா மூலம் வருபவர்கள் தடை செய்யப்படுவர்; மிகவும் குறைந்த அளவில் அத்தியாவசியத் தேவைகள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி இருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், அவர்களின் மனைவி, குழந்தைகளை இந்த உத்தரவு பாதிக்காது.
கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவால் வேலையிழந்த லட்சக்கணக்கான அமெரிக்க மக்களுக்கு உள்நாட்டில் வேலைகிடைக்க ஏற்பாடு செய்ய இந்த உத்தரவு பெரும் உதவியாகவும், அவசியத் தேவையாகவும் இருக்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு, பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கோரிக்கைகள் போன்றவற்றைக் கடந்து இந்த உத்தரவை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார்
மேலும் புதிதாக ‘பச்சை அட்டை’ வழங்கும் நடைமுறையும் இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்திவைத்தும் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்
இதுகுறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், “அமெரிக்காவில் பிப்ரவரி முதல் மே வரை வேலையின்மை அளவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 1.70 கோடி மக்கள் வேலையிழந்துள்ளார்கள்.
“எச்-1பி, எச்-2பி, ஜே மற்றும எல் விசா ஆகியவற்றின் மூலம் அமெரி்க்காவுக்குள் வேலைக்காக வரும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புக்கு பெரும் அச்சுறுத்தல் இருக்கிறது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.