ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்ததால் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சித் தகவல்.
குழந்தைகள் பிறந்த அதே நாளில் அம்மூவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த மூன்று குழந்தைகளில் இரண்டு ஆண் குழந்தைகள்; ஒன்று பெண் குழந்தை. அவர்களில் ஒரு ஆண் குழந்தை மட்டும் சுவாசப் பிரச்சினைகளால் சிரமப்பட்டு வருகிறது; மற்ற இரு குழந்தைகளும் நல்ல முறையில் உடல்நலம் தேறி வருகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மெக்சிகோவில் 1,85,000க்கும் அதிகமானோருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு 22,000க்கு மேற்பட்டோர் கிருமித்தொற்றால் உயிரிழந்தனர்.
எதிர்பார்க்கப்பட்டதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே மெக்சிகோவின் சான் லூயிஸ் பொட்டோசி மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பிறந்த இந்தக் குழந்தைகளை வேறு யாரும் வந்து பார்க்கவில்லை என்று குறிப்பிட்ட மருத்துவர்கள், தாயின் நஞ்சுக்கொடி மூலம் குழந்தைகளுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருக்குமா என்று ஆராய்ந்து வருகின்றனர்.
குழந்தைகளின் பெற்றோருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் ஏதுமில்லை என்றாலும் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி ஆய்வாளர்கள், பிறந்த பச்சிளம் குழந்தைக்கு தாயின் நஞ்சுக்கொடி வழியாக கொரோனா தொற்று பரவியதை கண்டறிந்து கூறி இருந்தார்கள். ஆனால், தாய்க்கும், குழந்தைக்கும் அதனால் ஆபத்து ஏற்படாது என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online