தஞ்சோங் பகார் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி அணியை எதிர்த்து எந்தக் கட்சி வேண்டுமானாலும் வேட்பாளர்களை நிறுத்தலாம் என்றும் அது யார் தங்களை சிறப்பாகக் கவனித்துக்கொள்வார்கள் என்பதை மக்கள் தேர்வு செய்ய வாய்ப்பளிக்கும் என்றும் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
ஜூலை 10ஆம் தேதி பொதுத் தேர்தலில் பிரதமர் லீ சியன் லூங்கின் தம்பி திரு லீ சியன் யாங், தஞ்சோங் பகார் குழுத் தொகுதியில் போட்டியிடும் சாத்தியம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு திரு சான் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அதேவேளையில் யார் வரு கிறார்கள், யார் போகிறார்கள் என்பதில் நாங்கள் கவனம் செலுத்துவதில்லை என்று குறிப்பிட்ட திரு சான், ஆளும் கட்சியின் குறிக்கோள் எப்போதும் போல ஒரே மாதிரியாகத்தான் உள்ளது என்றார்.
மக்களுடன் அணுக்கமாகப் பணியாற்றி அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தல், அவர்களையும் மொத்தத்தில் சிங்கப்பூரையும் கவனித்துக்கொள்ளுதல் போன்றவை மசெகவின் இலக்குகள் என்று குறிப்பிட்டார் அமைச்சர் சான்.
மக்கள் செயல் கட்சி தலைமையகத்தில் நேற்று வேட்பாளர்களை திரு சான் அறிமுகப்படுத்தி வைத்தார்.
தஞ்சோங் பகார் குழுத் தொகுதி எப்போதுமே மக்கள் செயல் கட்சியின் கோட்டையாக இருந்து வந்துள்ளது. சிங்கப்பூரின் முதல் பிரதமர் அமரர் லீ குவான் இயூ, 1955ஆம் ஆண்டில் தஞ்சோங் பகார் தனித்தொகுதியாக இருந்த போதிலிருந்து 2015ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை அதன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
திரு லீ சியன் யாங், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் ஓர் உறுப்பினராக அண்மையில் தம்மை இணைத்துக்கொண்டார்.

