சிட்னி: அனைத்துலக வருகையாளர்களுக்கான ஆஸ்திரேலிய எல்லை அடுத்த ஆண்டின் மத்திய காலம் வரை மூடப்பட்டிருக்கும் என்று அதன் பிரதமர் ஸ்காட் மோரிசன் சூசகமாகக் கூறியுள்ளார்.
கிருமி பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியா கடந்த மார்ச் மாதம் அனைத்துலகப் பயணிகளுக்கான தனது எல்லையை மூடியது. அது இவ்வாண்டு இறுதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் முன்னர் கூறப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான குவாண்டாஸ் 6,000 பேரை வேலையிலிருந்து நீக்குவதாக அறிவித்ததோடு 12 ஏர்பஸ் ஏ380 ரக விமானங்களை அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தது.
அப்போது பேசிய குவாண்டாசின் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஜோய்ஸ், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு முன் அனைத்துலக விமான சேவைகள் மீண்டும் தொடங்காது என்று கூறினார்.
இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மோரிசன், "உலகம் முழுவதும் கிருமித்தொற்றின் வீரியம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. எனவே ஆலன் ஜோய்ஸ் கூறியது நியாயமற்றது என்று சொல்வதற்கில்லை,” என்றார். இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் நேற்று புதிதாக 30 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.