கொவிட்-19க்குத்திரான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர ஓராண்டு காலம் எடுக்கலாம் என்று நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.
இவ்வாண்டு இறுதிக்குள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்ட டியூக் மனித தடுப்பு மருந்துக் கழகத்தின் தலைமை நிர்வாக அலுவலர் தாமஸ் டென்னி குறிப்பிட்டார். ஆனால், அதனைத் தயாரிப்பது, பெருமளவு உற்பத்தி செய்வது போன்றவற்றுக்கு அவகாசம் தேவைப்படும் என்று அண்மையில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு இறுதிக்குள் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் தடுப்புக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி ஃபௌசி குறிப்பிட்டாலும் மற்ற நிபுணர்கள் அவ்வளவு நம்பிக்கை தெரிவிக்கவில்லை.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சிலருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்படலாம்; ஆனால், தேவைப்படும் அனைவருக்கும் அது கிடைக்க சாத்தியமில்லை என்று டியூக் பல்கலைக்கழகத்தின் ஃபுக்குவா வர்த்தகப் பள்ளியின் சுகாதாரப் பொருளியலாளர் பேராசிரியர் டேவிட் ரைட்லே கூறினார்.
தடுப்பு மருந்துகள் எந்த அளவுக்கு மக்களை நோயிலிருந்து காக்கும் என்பது புரியாத நிலையில், கொரோனா கிருமிப் பரவலிலிருந்து அவ்வளவு சீக்கிரம் தப்பிக்க முடியாது என்று குறிப்பிட்ட டியூக்-என்யூஎஸ் மருத்துவப் பள்ளியின் தொற்றுநோய்கள் தடுப்புத் திட்டத்தின் துணை இயக்குநர் பேராசிரியர் ஊய் எங் இயோங் குறிப்பிட்டார்.
தற்போதிருந்து ஓராண்டு காலத்தில் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும் சாத்தியம் உண்டு என்றார் அவர்.
உலக அளவில் 140 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பு நிலையில் இருந்தாலும் 16 மட்டுமே மருந்தக பரிசோதனை நிலையை எட்டியுள்ளன.
அமெரிக்க நிறுவனமான Arcturus Therapeutics உடன் இணைந்து தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டியூக்- என்யூஎஸ் மருத்துவப் பள்ளி அடுத்த சில வாரங்களில் மருந்தக பரிசோதனையைத் தொடங்க உள்ளது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online