பாட்டாளிக் கட்சி புதிய அணி அல்ஜுனிட்டில் களமிறங்கியது

பாட்டாளிக் கட்சி புதிய அணி அல்ஜுனிட்டில் களமிறங்கியது

2 mins read
23a68545-9ed2-458e-bd74-edf3a0ed6778
538 பிடோக் நார்த் ஸ்திரீட் 3 உணவு நிலையத்தில் வாக்கு சேகரித்த பாட்டாளிக் கட்சியின் பிரித்தம் சிங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அல்ஜுனிட் குழுத்தொகுதியில் போட்டியிடும் பாட்டாளிக் கட்சியின் ஐந்து வேட்பாளர்களும் தொகுதி உலா சென்று குடியிருப்பாளர்களைச் சந்தித்தனர்.

வேட்பாளர்களை கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்த பின்னர் அவர்கள் நேற்றுக் காலை வாக்கு சேகரிப்பு நடவடிக்கையைத் தொடங்கினர். பாட்டாளிக் கட்சி இந்தக் குழுத் தொகுதியை 2011, 2015 ஆகிய இரு தேர்தல்களிலும் வென்று தன்வசம் வைத்துள்ளது.

ஐந்து வேட்பாளர்களில் மூவர் ஏற்கெனவே இங்கு வென்றவர்கள். பிரித்தம் சிங், சில்வியா லிம் மற்றும் ஃபைசால் மனாப் ஆகியோரைத் தவிர இரண்டு புதிய வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா, முன்னாள் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரல்ட் கியாம் ஆகிய இருவரும் அல்ஜுனிட் குழுத் தொகுதி வேட்பாளர் அணியில் இணைந்துள்ளனர்.

கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங், கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சென் ஷோ மாவ் ஆகிய இருவருக்குப் பதிலாக இவ்விருவரும் அல்ஜுனிட் குழுத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

புதிய அணியைச் சேர்ந்த ஐந்து வேட்பாளர்களும் நேற்று புளோக் 538 பிடோக் நார்த் ஸ்திரீட் 3 வழியாக தொகுதி உலா சென்றதைக் காணமுடிந்தது.

வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் இணையம் வழியாக வேட்பாளர்களை அறிமுகம் செய்தது பாட்டாளிக் கட்சி. தலைமைத்துவப் புதுப்பிப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக வேட்பாளர் அணி உருவாக்கப்பட்டுள்ளதாக அப்போது அதன் தலைவர்கள் தெரிவித்தனர்.

உணவு அங்காடி நிலையத்தில் தொகுதி உலா மேற்கொண்ட வேட்பாளர்கள் அங்கிருந்த குடியிருப்பாளர்களுக்கு கட்சியின் கையேட்டை கொடுத்து அவர்களோடு பேசினர். தொடர்ந்து அவர்களுடன் நிழற்படம் எடுத்துக்கொண்டனர். அங்கு சாப்பாட்டு மேசைகளில் காணப்பட்ட குடியிருப்பாளர்கள் மட்டுமல்லாது கடைக்காரர்களையும் வேட்பாளர்கள் சந்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

குடியிருப்பாளர்கள் பலரும் வேட்பாளர்களை உற்சாகத்துடன் வரவேற்றதோடு அவர்களை நோக்கி புன்னகைத்தவாறு பெருவிரலை உயர்த்திக் காட்டியதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குடும்பத்தினரை நிழற்படத்துக்காக அணுகியபோது ஒரு மீட்டர் இடைவெளி என்பதை நினைவில் கொள்ளுமாறு வேட்பாளர்களிடம் அந்தக் குடும்பத்தினர் கூறியதாகத் தெரிகிறது.

இது பாட்டாளிக் கட்சியின் 'ஏ' அணி என்று அரசியல் கவனிப்பாளர்களால் விமர்சிக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி எதிர்க்கட்சி வசம் இருக்கும் ஒரே குழுத்தொகுதியாக அல்ஜுனிட் உள்ளது.

தொகுதி உலா சென்ற வேளையில் ஒரு மீட்டர் என்னும் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடித்ததற்காக ஊடகத்தினருக்கு திரு பிரித்தம் சிங் நன்றி தெரிவித்தார்.

"இதனைக் கடைப்பிடிப்பது சிரமம் என்பது தெரியும். இருப்பினும் சமூக இடைவெளி தூதர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தாதவாறு அவர்களுக்கு நாம் உதவிபுரிய வேண்டும்," என்றும் திரு சிங் கூறினார். ஊடகத்தினரிடம் முக்கியமாக வேறு எதனையும் தெரிவிக்காத அவர், வரும் நாட்களில் கட்சி சார்பில் செய்தியாளர் கூட்டங்கள் நடத்தப்படும் என்று மட்டும் கூறினார்.