பாட்டாளிக் கட்சி நேற்று மேலும் ஐந்து வேட்பாளர்களை இணையம் வழி அறிமுகம் செய்தது. இவர்களில் மூவர் முதல்முறையாக தேர்தல் களம் காண்கிறார்கள். நேத்தனியல் கோ, 36, டான் சென் சென், 38, வழக்கறிஞர் ஃபாட்லி ஃபவுஸி, 40, ஆகிய மூவர்தான் அந்தப் புதியவர்கள்.
கென்னத் ஃபூ சென் குவான், 43, டெரன்ஸ் டான், 48, ஆகிய இருவரும் 2015ல் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டவர்கள். நீ சூன் குழுத்தொகுதியில் களம் கண்ட திரு கென்னத் ஃபூவின் அணி, 33.2% வாக்குகளைப் பெற்று வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டது. திரு டெரன்ஸ் டான், மரின் பரேட் குழுத் தொகுதியில் போட்டியிட்டார். அவரது அணி 35.9% வாக்குகளைப் பெற்றபோதிலும் அத்தொகுதியில் மசெக அணியே வென்றது.
மூன்றாவது வேட்பாளர் அணியை அறிவித்த பாட்டாளிக் கட்சி இறுதி அணியில் இடம்பெற்றுள்ளவர்களின் விவரங்களையும் தேர்தல் அறிக்கையையும் இன்று வெளியிட அக்கட்சி தீர்மானித்து உள்ளது.
வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த திரு பிரித்தம் சிங், "93 தொகுதிகளிலும் மசெக போட்டியிடும் வேளையில் பாட்டாளிக் கட்சி 21 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துகிறது. எஞ்சியுள்ள 72 தொகுதிகளும் மசெக வசம்தான் வரப்போகிறது. கொவிட்-19க்கு எதிரான போரில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடும் வேளையில் நாடாளுமன்ற சமநிலை என்னும் அம்சம் குறித்தும் சிங்கப்பூரர்கள் சிந்திக்க வேண்டும்," என்றார்.

