டாக்கா: பங்ளாதேஷில் நேற்று நிகழ்ந்த படகு விபத்தில் குறைந்தது 30 பேர் மாண்டனர்.
மற்றொரு படகின் மீது மோதியதை அடுத்து கிட்டத்தட்ட 50 பேர் பயணம் செய்துகொண்டிருந்த அந்தப் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த பலர் ஆற்றில் விழுந்தனர்.
“கவிழ்ந்த படகிலிருந்து இதுவரை 30 உடல்களை மீட்டுள்ளோம். படகில் 50 பேர் இருந்தனர். எங்களது மீட்புப் பணியினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பங்ளாதேஷின் தீயணைப்புப் படை அதிகாரி ஈனாயத் உசேன் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆற்றில் கவிழ்ந்த படகில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகவும் பலர் படகில் சிக்கிக்கொண்டதாகவும் விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.