ஜெனீவா: கொரோனா கிருமித்தொற்று கண்டறியப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்டது என்றாலும் கிருமிப் பரவல் தற்போதைக்கு முடிவடையும் சூழல் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸஸ் கூறியுள்ளார்.
சென்ற டிசம்பர் மாதம் சீனாவில் கிருமித்தொற்று கண்டறியப்பட்டதற்குப் பிறகு, உலகளவில் ஒரு கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு 5 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்துவிட்ட மோசமான நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கிருமி இன்னும் அதிகம் பரவ வாய்ப்புள்ளது.
“நாம் அனைவரும் இது முடிந்துவிட வேண்டும் என்று விரும்புகிறோம். நாம் அனைவரும் நம் வாழ்க்கையை பழையபடி தொடர விரும்புகிறோம்.
“ஆனால் கடினமான உண்மை என்னவென்றால், கிருமிப் பரவல் முடிவடைவதற்கான சூழல் தற்போதைக்கு இல்லை.
“பல நாடுகள் கிருமித்தொற்றில் இருந்து மீள்வதற்கான முயற்சியில் முன்னேற்றம் கண்டுள்ளன, என்றாலும் கிருமி வேகமாகப் பரவி வருகிறது,” என்றார்.
இதற்கிடையே கிருமித்தொற்று எவ்வாறு தொடங்கியது என்பதை ஆராய்வதற்கு உலக சுகாதார அமைப்பு அடுத்த வாரம் ஒரு குழுவை அனுப்பவுள்ளதாகவும் அவர் சொன்னார்.
“கிருமிப் பரவல் எவ்வாறு தொடங்கியது என்பது உட்பட கிருமியை பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டால், அதற்கு எதிராக இன்னும் சிறந்த வழியில் போராட முடியும்,” என்றும் டெட்ரோஸ் அதானம் சொன்னார்.
“கிருமித்தொற்றில் இருந்து பாதுக்காக்கக்கூடிய தடுப்பூசி கண்டுபிடிப்பில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றாலும் அது எந்தளவுக்கு வெற்றியடையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் அவசர திட்டப் பிரிவின் தலைவர் மைக் ராயன் சொன்னார்.
ஆனால் இடைப்பட்ட காலத்தில் தீவிர பரிசோதனை, தனிமைப்
படுத்தல், தொடர்பு தடமறிதல் ஆகியவற்றின் மூலம் உலக நாடுகள் கிருமித்தொற்றுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.