ஆள்கடத்தல் தொடர்பில் ஜோகூர் குடிநுழைவுத் துறையைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி கைது

2 mins read
b2caa164-86a8-42a0-848c-3a03b9ad8e2c
கடந்த மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட மூன்று குடிநுழைவுத்துறை அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி அந்த பெண் அதிகாரி பணியில் இருக்கும்போது வேலையிடத்திலேயே கைது செய்யப்பட்டதாக திரு அயோப் கான் தெரிவித்தார். படம்: NST -

ஜோகூர் குடிநுழைவுத் துறையில் மூத்த பெண் அதிகாரி ஒருவருக்கு ஆள்கடத்தல் நடவடிக்கைகளில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த அதிகாரியை போலிசார் கைது செய்துள்ளனர்.

குடிநுழைவுத் துறை அலுவலகத்தில் உதவி இயக்குநர் பதவியில் இருக்கும் அந்த 50 வயது பெண் அதிகாரி நேற்று முன்தினம் (ஜூலை 1) கைது செய்யப்பட்டதாக மாநில போலிஸ் தலைமை ஆணையர் அயோப் கான் மைதின் பிட்சை தெரிவித்தார்.

கடந்த மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட மூன்று குடிநுழைவுத்துறை அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி அந்த பெண் அதிகாரி பணியில் இருக்கும்போது வேலையிடத்திலேயே கைது செய்யப்பட்டதாக திரு அயோப் கான் தெரிவித்தார்.

மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்படுவதற்கு முன்பாக, போலி குடிநுழைவு ஸ்டாம்பை பயன்படுத்தி இந்தோனீசிய நாட்டவர்களை மலேசியாவுக்குள் கடத்தும் செயலில் இந்தக் குழு ஈடுபட்டதாக நம்பப்படுவதாக இன்று (ஜூலை 3) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அதிகாரி மீது, ஆள் கடத்தலுக்கு எதிரான சட்டப் பிரிவு 26A, வெளிநாட்டவரை கடத்துவதற்கு எதிரான சட்டம் 2007, 'சொஸ்மா' எனப்படும் பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்படும் என்றும் திரு அயோப் கான் தெரிவித்தார்.

ஜோகூரின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஆள்கடத்தலில் ஈடுபட்டதன் தொடர்பில் இது வரை 23 அமலாக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். அவர்களில் 14 பேர் போலிசார், ஐவர் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், நால்வர் குடிநுழைவுத் துறை அதிகாரிகள்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்