சோல்: அமெரிக்காவுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தத் தேவையில்லை என்பதே வட கொரியாவின் நிலைப்பாடு என மூத்த வட கொரிய தூதர் நேற்று தெரிவித்தார். அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துவது அமெரிக்காவுக்கு ‘ஓர் அரசியல் ஆயுதமாகத்தான் இருக்கும் என்று அவர் கூறினார்.
இருதரப்புகளுக்கும் இடையே நிகழும் பேச்சுவார்த்தை பயனற்றதாக இருக்கும் என்றும் வட கொரியாவின் கொள்கையில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்றும் துணை வெளியுறவு அமைச்சர் சொ சன் ஹுய் சொன்னார். அமெரிக்கா அதன் அரசியல் நெருக்கடிக்காகவே இப்பேச்சுவார்த்தையைப் பயன்படுத்திக்கொள்ளும் என்றார் அவர். வட கொரியாவுடன் நின்றுபோன பேச்சுவார்த்தை குறித்துப் பேச அமெரிக்கத் துணைச் செயலாளர் ஸ்டீவன் பீகன் அடுத்த வாரம் தென் கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள அமெரிக்கத் தேர்தலுக்கு முன் மீண்டும் ஒருமுறை சந்திப்பு நிகழ்த்த வேண்டும் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் முன்னரே கூறியிருந்தார்.
அக்டோபர் மாதம் சுவீடனில் நடைபெறவிருந்த அவர்களின் சந்திப்புக்கான ஏற்பாடு கைவிடப்பட்டதை அடுத்து தம்மைச் சந்திக்குமாறு திரு கிம்மிடம் திரு டிரம்ப் கேட்டுக்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.