சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் மார்ச் 4ஆம் தேதிக்குப் பிறகு நேற்று ஆக அதிக கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. இதனால் வீட்டிலேயே இருக்கும் உத்தரவை மேலும் இரண்டு புறநகர்களுக்கு விரிவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு அம்மாநிலம் தள்ளப்பட்டது.
அத்துடன் ஒன்பது பொது வீடமைப்பு வட்டாரங்களிலும் முழு முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. அவ்வட்டாரங்களில் மொத்தம் 3,000 குடியிருப்பாளர்கள் உள்ளனர்.
இவர்களில் பலர் கொவிட்-19 கிருமி தொற்றியவர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். இதைத் தொடர்ந்து இவர்களின் வீடுகள் அமைந்துள்ள ஒவ்வொரு மாடியிலும் போலிசார் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் ஆக அதிக மக்கள் தொகை உள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது விக்டோரியா. இங்கு நேற்று 108 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 66ஆக இருந்தது. அதற்கு முந்தைய நாட்களில் 70க்கு மேற்பட்ட கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருந்தன.
இதனால் 30க்கும் மேற்பட்ட புறநகர்களில் அரசாங்கம் இவ்வாரத் தொடக்கத்தில் முடக்க நிலையை அறிவித்திருந்தது.
ஆஸ்திரேலியாவின் மற்ற மாநிலங்களில் கிருமிப் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அனைவரது கவனமும் விக்டோரியா மீது உள்ளது.
அந்நாட்டின் ஆக அதிக மக்கள் தொகை உள்ள நியூ சவுத் வேல்சில் நேற்று ஆறு புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. நேற்று முன்தினம் அங்கு புதிய தொற்றுச் சம்பவம் எதுவும் பதிவாகவில்லை.
இருப்பினும், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் கொரோனா கிருமித்தொற்று நோயைச் சமாளிப்பதில் ஆஸ்திரேலியா முன்னேற்றம் கண்டுள்ளது. இதுவரை அங்கு சுமார் 8,300 கிருமித்தொற்று சம்பவங்களும் 104 கிருமி தொடர்பான உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன.