அமைச்சர் ஈஸ்வரன்: கிடைக்கும் வேலை வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்

அமைச்சர் ஈஸ்வரன்: கிடைக்கும் வேலை வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்

2 mins read
3993d682-b793-4eec-8ca5-5203ea21b2a3
வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிடும் மசெக அணியின் (இடமிருந்து) திரு அங் வெய் நெங், அமைச்சர் டெஸ்மண்ட் லீ, அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், திருமதி ஃபூ மீ ஹார் ஆகியோர் வெஸ்ட் கோஸ்ட் சந்தையில் நேற்று தொகுதி உலா சென்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கி.ஜனார்த்தனன்

கொவிட்-19க்குப் பிந்திய காலகட்டத்தில், மக்களின் முக்கிய கவலை பொருளியல் சூழல் என்பதால் வேலைவாய்ப்பு தொடர்பான உதவித் திட்டங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொண்டு அவற்றை பயன்படுத்திக்கொள்ளுமாறு தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

கிடைக்கும் வாய்ப்புகளை சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு பிடித்த வேலை கிடைக்கும் வரை, திறன்களை வளர்த்துக்கொள்ளுமாறு வேலை தேடுபவர்களுக்கு அவர் அறிவுறுத்துகிறார்.

"கிடைக்கும் வாய்ப்புகளை இந்தியர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என்று வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்றத்தில் 'ஜாப்ஸ் ஸ்டேஷன்' மற்றும் தொண்டூழிய வாழ்க்கைத்தொழில் ஆலோசகர் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்த திரு ஈஸ்வரன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

வேலைக்கு விண்ணப்பிக்க உதவும் இந்த 'ஜாப்ஸ் ஸ்டேஷன்' முகப்புகள் வெஸ்ட் கோஸ்ட், ஆயர் ராஜா, பூன்லே, தெலுக் பிளாங்கா, தி ஃப்ரண்டியர் ஆகிய சமூக மன்றங்களில் திறக்கப்படும்.

"ஜாப்ஸ் ஸ்டேஷன் முகப்புகளில் உங்களது விவரங்களைப் பதிவு செய்து பத்தே நிமிடங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் உதவி தேவைப்பட்டால் நீங்கள் வாழ்க்கைத்தொழில் ஆலோசகர்களின் உதவியை நாடலாம்," என்று அவர் தெரிவித்தார்.

வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை சகிப்புத்தன்மை காட்டும்படி இந்திய சமூகத்தினரை திரு ஈஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

"தற்போது கிடைக்கும் வேலையிலிருந்து திறன்களைப் பெற்றுக்கொள்ளலாம். வேலை முறையைக் கற்றுக்கொள்ளலாம். பிடித்த வேலை கிடைக்கும்போது இவை உதவும்," என்று அவர் கூறினார்.

மாண்டரின் மொழி தெரியாத இந்தியர்கள் வேலை தேடும்போது அதிகம் சிரமப்படுவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த திரு ஈஸ்வரன், பிற மொழி ஆற்றலைக் காட்டிலும் வேலைத்திறன் ஆற்றல்தான் இந்தியர்களுக்கு வேலையைப் பெற்றுத் தரும் எனக் கூறினார்.

"ஒருசில வேலைகளுக்குத்தான் மாண்டரின் மொழித்திறன் தேவைப் படுகிறது. 'மெக்டோனல்ட்ஸ்' போன்ற உணவகங்களில் மாண்டரின் தெரிந்திருக்க தேவையில்லை. 'ஏத்தோஸ்' பாதுகாவல் நிறுவனத்தில் நல்ல மேலாளர் வேலைகள் உள்ளன. அதற்கும் மாண்டரின் தேவைப்படாது. மொழியைவிட வேலைத்திறனும் மனப்போக்கும் முக்கியம்," என்றார் அவர்.

போதிய வேலை வாய்ப்புகள் உள்ளதா, பிடித்த துறையில் வேலை கிடைக்குமா போன்றவை கேள்விக்குறியாக உள்ள இச்சூழலில் புதிய வேலை வாய்ப்புகளை முடிந்தவரை உருவாக்கும் முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக திரு ஈஸ்வரன் உறுதியளித்தார்.

வெஸ்ட் கோஸ்ட் தொகுதியில் மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளர்களுடன் உலா சென்ற அமைச்சர் ஈஸ்வரன், கடந்த சில நாட்களாக தாங்கள் அத்தொகுதியின் பல்வேறு இடங்களுக்குச் சென்று குடியிருப்பளர்களைச் சந்தித்ததாகக் கூறினார்.