வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபுளோரிடா, டெக்சஸ் ஆகிய இரு மாநிலங்களில் கிருமித்தொற்று வேகமெடுத்து உள்ளது.
இவற்றில் மட்டும் நேற்று முன்தினம் கிட்டத்தட்ட 20,000 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக, டெக்சஸ் மாநிலத்தில் சனிக்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக தொற்று எண்ணிக்கை அதிகரித்தது.
அங்கு மூச்சுத்திணறல் காரணமாக 7,890 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 24 மணி நேரத்தில் புதிதாக 238 பேர் பாதிக்கப்பட்டனர். இம்மாதம் தொடங்கியதும் முதல் நான்கு நாட்களில் அமெரிக்காவின் 14 மாநிலங்களில் அன்றாடம் பதிவாகும் கிருமித்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
அமெரிக்கா முழுவதும் இதுவரை சுமார் 130,000 பேர் கொரோன கிருமியால் உயிரிழந்துவிட்டனர். 2.8 மில்லியன் பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருமிப் பரவல் கட்டுப்படாத நிலையில் வெள்ளை மாளிகையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. கிருமித்தொற்றுக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடக் கூடிய ஏராளமான மருத்துவர்களும் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு இருப்பது பெரும் விமர்சனத்தைக் கிளப்பி உள்ளது.
விழாவில் உரை நிகழ்த்திய அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் பதிவாகி இருக்கும் 99 விழுக்காட்டு கிருமிச் சம்பவங்கள் 'எவ்விதத்திலும் ஆபத்தற்றவை' என்று கூறினார். இருப்பினும் அதற்குச் சான்றாக எதனையும் அவர் குறிப்பிடவில்லை. கொரோனா கிருமிச் சம்பவங்களைக் கையாண்ட விதம் குறித்து கடும் விமர்சனத்துக்கு ஆளாகிவரும் திரு டிரம்ப், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சீனாவே பொறுப்பு என்றார்.

