அலுவலக தொலைபேசி அழைப்புகளின்போது பிள்ளைகள் சத்தம் போட்டதால், வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறும் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தாம் பணிபுரிந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
சான் டியாகோவைச் சேர்ந்த 35 வயதான திரிசனா ரியோஸ் என்ற அப்பெண், காப்பீட்டு தரகு நிறுவனமான ஹப் இன்டர்நேஷனலுக்கு எதிராக பாலின பாகுபாடு மற்றும் தவறான பணிநீக்கம் ஆகிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.
ஆகஸ்ட் 2019ஆம் ஆண்டு முதல் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரியோஸ், கொரோனா கிருமித்தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் வீட்டிலிருந்து வேலை செய்ய தொடங்கினார்.
ஜூன் 2ஆம் தேதி வேலையை இழந்த அவர், “எனது வாழ்நாள் முழுவதும் நான் உழைத்ததைவிட , இக்காலகட்டத்தில் கடினமாக உழைத்தேன்,” என்று சொன்னார்.
தனது 4 வயது மகள், ஒரு வயது மகனுக்கு தாயாகவும் தனது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும் தமக்கு இருக்கிறது என்றார் அவர்.
கொரோனா கிருமிப் பரவலை முறியடிக்கும் நடவடிக்கையாக உலக நாடுகள் பலவற்றிலும் வீட்டிலிருந்து வேலை செய்யும் போக்கு தற்போது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.