சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரத்தில் நேற்று கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, மேலும் இரண்டு மாநிலங்கள் விக்டோரியாவுடனான எல்லையை மூடியுள்ளன.
கடந்த சில நாட்களாக கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வந்ததால், விக்டோரியாவுடனான எல்லையை ஏற்கெனவே நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் மூடியதைத் தொடர்ந்து தற்போது குவின்ஸ்லாந்தும் தெற்கு ஆஸ்திரேலியாவும் விக்டோரியாவுடனான எல்லையை மூடிவிட்டன.
மெல்பர்னைத் தலைநகராக கொண்ட விக்டோரியாவில் புதன் கிழமையன்று 134 புதிய தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன.
குவின்ஸ்லாந்து மற்ற மாநில எல்லையை திறக்க தயாராக உள்ளது என்றாலும் வெள்ளிக்கிழமை மதியம் முதல் விக்டோரியாவில் இருந்து வருபவர்களுக்குத் தடை விதித்துள்ளது.
மேலும் குவின்ஸ்லாந்து குடியிருப்பாளர்கள் விக்டோரியா செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று குவின்ஸ்லாந்து தலைவர் கூறியுள்ளார்.
அப்படியும் விக்டோரியா செல்பவர்கள் மாநிலத்திற்குத் திரும்பும் போது விடுதிகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அதற்கான செலவை அவர்களே ஏற்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
இதற்கிடையே தெற்கு ஆஸ்திரேலியாவும் விக்டோரியா எல்லையை மூடியது.
இந்நிலையில், மெல்பர்னில் நேற்று முதல் மீண்டும் நடப்புக்கு வந்துள்ள முடக்க உத்தரவால் சுமார் ஐந்து மில்லியன் மக்கள் வீட்டிலேயே அடைபட்டு கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதல் முடக்க உத்தரவு கடந்த மே மாதம் முதல் படிப்படியாக தளர்த்தப்பட தொடங்கிய பிறகு, சில நாட்களாக செயல்பட்டு வந்த உணவகங்கள், காபி கடைகள், தங்குவிடுதிகள், சில்லறை வர்த்தகங்கள் இந்த முடக்க உத்தரவால் மீண்டும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆஸ்திரேலியாவில் ஏற்படக்கூடிய பொருளியல் பாதிப்பு பேரழிவாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.