வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 65,551 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல் இதனை உறுதிப்படுத்துகிறது.
அமெரிக்காவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 55,000க்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. அந்நாட்டில் ஒவ்வொரு நாளும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் புதிய உச்சத்தை எட்டுகின்றன.
குறிப்பாக, கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, டெக்சஸ் உள்ளிட்ட மாநிலங்களில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அண்மையில் புதிய உச்சத்தை எட்டின. இதனால் அமெரிக்காவில் பொருளியல் மீட்சி அடைவதற்கான சாத்தியம் குறைந்துகொண்டே போகிறது.
பங்குச் சந்தையில் பங்குகளின் விலை சுமார் 1 விழுக்காடு குறைந்தது. அமெரிக்க மாநிலங்கள் மறுபடியும் முடக்கப்பட்டால் வர்த்தகங்கள் பெரிதும் பாதிப்படையும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுவதே அதற்குக் காரணம்.
அமெரிக்காவில் ஆக அதிக மக்கள்தொகையைக் கொண்ட மூன்று மாநிலங்கள் போக, மற்ற மாநிலங்களிலும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன.
அலபாமா, மொண்டானா, விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக கிருமித்தொற்றுச் சம்பவங்கள் நேற்று முன்தினம் பதிவு செய்யப்பட்டன.
கடந்த இரு வாரங்களாக அந்நாட்டின் 41 மாநிலங்களில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
கடந்த புதன்கிழமை அமெரிக்காவில் 60,541 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் பதிவான சம்பவங்கள் அந்த எண்ணிக்கையையும் மிஞ்சிவிட்டன.
கொரோனா கிருமித்தொற்றால் உலகிலேயே ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில் இதுவரை 3.1 மில்லியனுக்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கிருமித்தொற்று பாதிப்பால் இதுவரை 133,195 பேர் உயிரிழந்துவிட்டனர்.
கிருமித்தொற்றுச் சம்பவங்கள் இவ்வளவு அதிகமாக இருந்தும் அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் நிலவரத்தைக் குறைத்து மதிப்பிடுகிறார்.
கிருமிப் பரவல் காரணமாக அமெரிக்கர்கள் வெளியே சென்று பொருள் வாங்குவதற்கு அஞ்சுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.