பிரேசில் உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இத்தாலி தடை
ரோம்: பிரேசில் உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இத்தாலி தடை விதித்துள்ளது. அந்த நாட்டுப் பயணிகள் கிருமியைப் பரப்பும் அபாயம் அதிகமாக இருப்பதாக இத்தாலி கருதுகிறது.
ஆர்மினியா, பஹ்ரேன், பங்ளாதேஷ், போஸ்னியா, பிரேசில், சிலி, டோமினிக்கன் குடியரசு, குவைத், வட மாஸ்டோனியா, மோல்டோவா, ஓமான், பனாமா, பெரு ஆகிய நாடுகள் அவை.
“உலகம் முழுவதும் கிருமிப் பரவல் தீவிரம் அடைந்துள்ளது. அண்மைய மாதங்களாக இத்தாலியர்கள் செய்த தியாகம் வீண்போக விடக்கூடாது,” என்று இத்தாலிய சுகாதார அமைச்சர் ராபெர்ட்டோ ஸ்பெரான்ஸா கூறினார்.
சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலியில்தான் கொரோனா கிருமி முதலில் பரவத் தொடங்கியது. அந்நாட்டில் 242,000க்கும் அதிகமானோருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. கிருமித்தொற்று பாதிப்பால் கிட்டத்தட்ட 35,000 பேர் உயிரிழந்துவிட்டனர்.
மெக்சிகோவில் அதிகரிக்கும் தொற்று
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 7,280 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களையும் சேர்த்து இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 282,283ஆக அதிகரித்துள்ளது. கிருமித்தொற்று பாதிப்பால் மேலும் 730 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் இதுவரை மொத்தம் 33,526 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்துவிட்டனர்.
கொரோனா கிருமி பரவும் மையப் பகுதியாக லத்தீன் அமெரிக்கா உருவெடுத்துள்ளது. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் பொருளியலை மீட்பதிலும் சமநிலையைக் கடைப்பிடிக்க மெக்சிகோ அரசாங்கம் முற்படுகிறது.
கடந்த வாரம் ஸ்பெயின், பிரான்சை முந்தி, கொரோனாவால் உலகிலேயே ஐந்தாவது ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக மெக்சிகோ உள்ளது.
பாகிஸ்தானிய விமானிகளிடம் போலிச் சான்றிதழ்கள்: அமெரிக்கா தடை
வாஷிங்டன்: பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பங்கு விமானிகள் போலிச் சான்றிதழ்கள் பெற்றிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் தேசிய விமானம் அமெரிக்காவுக்குப் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வழக்கறிஞர்களுக்கு அமெரிக்கப் போக்குவரத்துத் துறை இம்மாதம் 1ஆம் தேதி தெரியப்படுத்தியது. இது தொடர்பான கடிதத்தை அத்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது.
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் நிதி இழப்பால் தவித்து வருகிறது. அந்நிறுவனத்தின் விமானம் ஒன்று கடந்த மே 22ஆம் தேதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 98 பேரும் உயிரிழந்துவிட்டனர்.