ஹாங்காங்: நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சமூக அளவிலான கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தலைதூக்கி உள்ளதைத் தொடர்ந்து, ஹாங்காங்கில் பள்ளிக்கூடங்கள் மீண்டும் மூடப்படுகின்றன. திங்கட்கிழமை முதல் எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் கோடைகால விடுமுறை விடுப்படுவதாக ஹாங்காங் கல்வித் துறை செயலாளர் கெவின் யுவெங் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
பள்ளிக்கூடங்கள் மூடப்பட இருக்கும் தகவலை ஹாங்காங் இக்கனாமிக்ஸ் டைம்ஸ் சஞ்சிகை ஏற்கெனவே தெரிவித்திருந்தது. கிருமித்தொற்றுச் சம்பவங்கள் குறைந்துகொண்டே சென்றதால் அச்சுறுத்தல் காணப்படாத நிலையில் ஹாங்காங்கில் நடப்பில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அங்கு 34 உள்ளூர்வாசிகளுக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா கிருமிப் பரவல் தொடங்கியது முதல் இந்த எண்ணிக்கையே ஹாங்காங்கில் ஆக அதிகம்.
மக்கள் வேலைக்குத் திரும்பி உணவகங்களில் கூட்டம் மீண்டும் காணப்பட்ட நிலையில் ஹாங்காங்கில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
மேலும், கிருமிப் பரவலுக்கு எதிரான போராட்ட காலத்தில் நான்கு மாத காலம் வீட்டிலிருந்தவாறே மாணவர்கள் கல்வி கற்று வந்த நிலையில் மே மாத இறுதியில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
கிருமித்தொற்று சம்பவங்கள் எதுவும் பதிவாகாமல் பல நாட்கள் கடந்த நிலையில் மீண்டும் கிருமித்தொற்று சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளதால் சமூகக் கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கத் தொடங்கி உள்ளது ஹாங்காங்.
உணவகங்களில் வார இறுதி நாட்களில் 60 விழுக்காடு வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், உணவகங்களில் ஒரு மேசையைச் சுற்றி எட்டுப் பேரும் மதுக்கூடங்களில் அந்த எண்ணிக்கை நால்வர் என்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
பிப்ரவரி, ஏப்ரல் என இருமுறை கிருமிப் பரவல் அலையைச் சந்தித்தபோதிலும் ஹாங்காங்கில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,365 என கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.