கொவிட்-19 நெருக்கடியைச் சமாளிப்பதன் தொடர்பில் நிறைய நாடுகள் தவறான வழியைக் கையாள்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இதனால் நிலைமை மேலும் மோசமாகும் என்று நேற்று (ஜூலை 13) அதன் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ் எச்சரித்தார்.
உலகளவில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் 13 மில்லியனைத் தாண்டிவிட்டதாக அரசாங்க அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ராய்ட்டர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.
ஐந்தே நாட்களில் ஒரு மில்லியன் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. இதுவரை அரை மில்லியனுக்கு மேலானோர் கிருமி பாதிப்பால் உயிரிழந்துவிட்டனர்.
இந்நிலையில், கிருமித் தடுப்பு தொடர்பில் அளவுக்கு அதிகமான நாடுகள் தவறான பாதையில் செல்வதால், பழைய நிலைக்குத் திரும்பும் சாத்தியம் வரும் நாட்களில் இல்லை என்று திரு டெட்ரோஸ் தெரிவித்தார்.
எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டுக் கூற விரும்பவில்லை என்று சொன்ன திரு டெட்ரோஸ், “வெளிப்படையாகச் சொல்கிறேன். தவறான வழியில் செல்லும் நாடுகள் மிகப் பல. தொடர்ந்து மக்களின் முதல் எதிரியாக இக்கிருமி உள்ளது. தொற்றைக் கட்டுப்படுத்தும் அடிப்படை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படாவிட்டால், இத்தொற்று நோய் ஒரே வழியில்தான் போகும். அதாவது மேலும் மோசமாகிக் கொண்டே போகும்,” என்றார்.