அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில், முற்றிலும் இணையம் வழியாகப் பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கு விசா மறுக்கப்படும் என்று முன்பு அமெரிக்க அதிபர் வெளியிட்ட அறிக்கை நேற்று (ஜூலை 14) மீட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த அறிவிப்பால், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மாணவர்களுக்கான விசாவின் தொடர்பில் அதிபர் டிரம்பின் முந்தைய முடிவை எதிர்த்து எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
ஹார்வர்டு பல்கலைக்கழகம், மசாச்சூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை தொடுத்த வழக்கு போஸ்டனில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, விசா வழங்குவது தொடர்பான அதிபர் டிரம்பின் அறிவிப்பு மீட்டுக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்க குடிநுழைவு மற்றும் சுங்கத்துறை அமலாக்க முகவை வெளியிட்டபடி, வெளிநாட்டு மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்குச் செல்வதற்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கப்படுகிறது. பெரும்பாலான கல்லூரிகள் கொவிட்-19 பரவலைத் தடுக்கும் நோக்கில் இணையம் வழியாகப் பாடங்களை நடத்துகின்றன.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு பாடங்கள் முற்றிலுமாக இணையம் வழி கற்பிக்கப்பட்டால், அத்தகைய மாணவர்கள் அமெரிக்காவில் இருந்தால் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும், வெளிநாட்டில் இருந்தால் அவர்கள் அமெரிக்காவுக்குச் செல்ல விசா மறுக்கப்படும் என்று விசா கட்டுப்பாடுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜூலை 6ஆம் தேதி அறிவித்ததையடுத்து, உலக அளவில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தவிப்புக்குள்ளாகினர்.
கடந்த ஆண்டு சிங்கப்பூரைச் சேர்ந்த 4,632 மாணவர்கள் அமெரிக்காவில் படித்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட அனைத்துலக மாணவர்கள் அமெரிக்காவில் படித்து வருகின்றனர்.
கொவிட்-19 சூழல் காரணமாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத சிங்கப்பூர் மாணவர்களுக்காக இவ்வாண்டு கூடுதலாக 2,000 இடங்கள் உருவாக்கப்படும் என்று சிங்கப்பூர் கல்வி அமைச்சு இம்மாதத் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது.