அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகின்றன.
அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 67,632 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டது.
குறிப்பாக, டெக்சஸ், ஒக்லஹோமா ஆகிய மாநிலங்களில் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. டெக்சஸ் மாநிலத்தில் 10,791 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
கிருமித்தொற்று பாதிப்பால் அங்கு மேலும் 110 பேர் உயிரிழந்தனர். அந்த மாநிலத்தில் இவ்விரு எண்ணிக்கையும் புதிய உச்சத்தை எட்டியதாக டெக்சஸ் மாநில சுகாதார சேவைத் துறை டுவிட்டரில் பதிவிட்டது.
ஒக்லஹோமாவில் புதிய உச்சமாக நேற்று 1,075 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அம்மாநில ஆளுநர் கெவின் ஸ்டிட்டையும் கிருமி தொற்றியது.
அலபாமா மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 47 மரணங்கள் பதிவாகின. அங்கு ஒரே நாளில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது இதுவே முதன்முறை.
ஃபுளோரிடா உட்பட மற்ற மாநிலங்களிலும் கொரோனா கிருமி வேகமாகப் பரவி வருகிறது. ஃபுளோரிடாவில் இதுவரை 302,000 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அண்மைய வாரங்களில் கலிஃபோர்னியாவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஏறுமுகம் கண்டு வருகின்றன. எனவே, அங்கு முடக்கநிலையை அமல்படுத்தும் கட்டாயத்திற்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கலிஃபோர்னியாவில் நேற்று 11,125 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. கிருமித்தொற்று பாதிப்பால் அங்கு மேலும் 140 பேர் மரணமுற்றதாக அம்மாநிலத்தின் பொதுச் சுகாதாரத் துறை தெரிவித்தது.
அமெரிக்காவில் கொரோனாவால் அடுத்த மாதத்திற்குள் மரண எண்ணிக்கை 150,000ஐ கடக்கக்கூடும் என முன்னுரைக்கப்படுகிறது.
அந்நாட்டில் இதுவரை 3.5 மில்லியனுக்கும் அதிகமானோரை கிருமி தொற்றியுள்ளது. கிருமித்தொற்று பாதிப்பால் 136,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.