தாய்லாந்தின் சியாங் மாய் மாநிலத்தில் இணையம் வழி சூதாட்டம் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூரர்களும் தாய்லாந்து நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் இரண்டு சிங்கப்பூர் ஆடவர்களும் இரண்டு தாய்லாந்து பெண்களும் அடங்குவர்.
சட்டவிரோதமான நடவடிக்கை குறித்து கிராமவாசிகளிடமிருந்து தகவல் கிடைத்ததாக தாய்லாந்து போலிசார் தெரிவித்தனர்.
அந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியபோது நான்கு பேர் மடிக்கணினிகளைப் பயன்படுத்தி இணையம் வழி சூதாட்டம் நடத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக தாய்லாந்து போலிசார் தெரிவித்தனர்.
இணையம் வழி சூதாட்டத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சாதனங்களை போலிசார் பறிமுதல் செய்தனர்.
இணையம் வழி சூதாட்டத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட இணையத்தளத்துக்கு மலேசியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் பணம் வழங்கியதை விசாரணையின்போது சந்தேக நபர்கள் தெரிவித்ததாக போலிசார் கூறினர்.
இணையத்தளத்தின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க விசாரணை நடைபெற்று வருகிறது.


