அமெரிக்காவின் மன்ஹாட்டனில் 33 வயது தொழிலதிபர் ஒருவர் ஆடம்பர தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் கொல்லப்பட்டு, தலை, கை, கால்கள் போன்றவை வெட்டப்பட்ட நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கொடூரச் செயலை நிபுணத்துவம் மிகுந்த ஒருவர்தான் செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
முகக்கவசம் உட்பட முற்றிலும் கறுப்பு நிறத்தில் உடையணிந்திருந்த கொலையாளி, 33 வயதான திரு ஃபாஹிம் சாலேயை மின்தூக்கியிலிருந்து பின் தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்தது தெரிய வந்துள்ளது.
பின்னாலிருந்து சாலேயின் தலையில் சுட்டு, பின்னர் தலை உட்பட மற்ற பாகங்களை மின்ரம்பத்தைக் கொண்டு துண்டித்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று இந்தத் தகவல்களை அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர். திரு சாலேயின் உடல் பாகங்கள், மன்ஹாட்டன்’ஸ் லோயர் ஈஸ்ட் சைடில் உள்ள அவரது அடுக்குமாடிக் குடியிருப்பில் நெகிழி குப்பைப் பைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்தது.
அந்தக் குடிருப்புப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள், திரு சாலேயின் சகோதரியிடம் நடத்தப்பட்ட விசாரணை ஆகியவற்றிலிருந்து இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்றும் அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
அந்தக் கட்டடத்தின் ஏழாவது மாடியில் அமைந்திருக்கும் அந்த வீட்டை திரு சாலே US$2.25 மில்லியன் (S$3.13 மில்லியன்) விலையில் கடந்த ஆண்டு வாங்கியதாகக் கூறப்பட்டது.
திரு சாலேயின் சகோதரி பலமுறை கைபேசியில் அழைத்தும் அவரிடமிருந்து பதிலேதும் இல்லை. அதனால் சாலேயின் வீட்டுக்கு அவரது சகோதரி சென்றார். அந்த வேளையில் கொலையாளி குடியிருப்பின் பின்பக்க கதவு வழியாக வெளியேறி மாடிப்படிக்கட்டுகளை அடைந்து தப்பித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மின் ரம்பத்தை சாக்கெட்டில் விட்டுச் சென்ற கொலையாளி ஆதாரங்களை அழிக்க முற்பட்டிருக்கலாம் என்று போலிஸ் துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.
அனைத்துலக அளவில் வர்த்தகங்களில் ஈடுபட்டிருந்த திரு சாலே பங்ளாதேஷிலும் நைஜீரியாவிலும் சொந்த நிறுவனங்களை நடத்தி வந்தார். மன்ஹாட்டனில் இருந்த அவரது நிறுவனம் வளரும் நாடுகளில் முதலீடுகளைச் செய்து வந்தது.
அவரது பெற்றோரின் பூர்வீகம் பங்ளாதேஷ். அவரது கொலைக்கு வர்த்தகத் தொடர்புகள் ஏதும் காரணமாக இருக்குமா என்ற கோணத்திலும் போலிசார் விசாரித்து வருகின்றனர்.