மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து ஏறுமுகம் கண்டால் அந்நகர் மீண்டும் முடக்கப்படக்கூடும். மணிலா மாநகரில் இம்மாத இறுதிவரை நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இருக்கும்.
இதனால் பெரும்பாலான வர்த்தகங்கள் செயல்பட முடியும் என்று அதிபர் பேச்சாளர் ஹேரி ரோக் நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் கூறினார்.
இம்மாத இறுதிக்குள் பிலிப்பீன்சில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் 80,000ஐ எட்டிவிடக்கூடும் என பிலிப்பீன்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று முன்னுரைத்ததைத் தொடர்ந்து, மணிலாவில் வீட்டில் இருக்கும் உத்தரவை மறுபடியும் பிறப்பிக்க அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே எண்ணியதாக திரு ரோக் சொன்னார்.
பிலிப்பீன்சில் ஜூன் மாதத் தொடக்கத்தில் வீட்டில் இருக்கும் உத்தரவு மீட்டுக்கொள்ளப்பட்டு பெரும்பாலான வர்த்தகங்கள் செயல்படத் தொடங்கியதை அடுத்து, கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மும்மடங்கு அதிகரித்து 58,850ஐ எட்டியுள்ளன. கிருமித்தொற்று பாதிப்பால் 1,614 பேர் மரணமடைந்துவிட்டனர்.
தென்கிழக்காசியாவில் இந்தோனீசியாவுக்கு அடுத்ததாக பிலிப்பீன்சில்தான் கிருமித்தொற்று நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது.
அந்நாட்டில் நாளுக்கு நாள் மேலும் அதிகமானோரை கிருமி தொற்றுவது குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. மணிலாவில் உள்ள மருத்துவமனைகள் சிலவற்றில் கொவிட்-19 சிகிச்சைப் பிரிவுகள் முழு கொள்ளளவை எட்டிவிட்ட நிலையில், நிலைமை மோசம் அடைந்தால் என்ன செய்வது என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

