அமெரிக்காவில் கட்டுக்கடங்காத கிருமிப்பரவலால் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 77,000 பேர் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுடன் சேர்த்து மொத்தம் 3.53 மில்லியன் பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 138,000 பேர் கிருமித் தொற்றுக்கு பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில் முகக்கவசம் அணிவதில் மாநிலங்களுக்கு இடையே முரண்பாடு நிலவுகிறது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கொலோராடோ ஆளுநர், குடியரசுக்கட்சியின் அர்கான்சாஸ் ஆளுநர் உட்பட 50 மாநிலங்களில் 26 மாநிலங்களில் ஆளுநர்கள் கட்டாயமாக முகக்கவசத்தை அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் ஜார்ஜியா மாநிலத்தின் குடியரசுக் கட்சியின் ஆளுநரான பிரையன் கெம்ப், முகக்கவசம் அணியும் விதிமுறையை தளர்த்தியிருக்கிறார்.
இருந்தாலும் குடியிருப்பாளர்கள் முகக்கவசம் அணிவதை ஊக்கமூட்டுகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டில் தங்கும் உத்தரவை முதல் முறையாக தளர்த்திய ஆளுநர்களில் கெம்ப்பும் ஒருவர்.
முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவது அளவுக்கு மீறிய கட்டுப்பாடு என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால் ஜார்ஜியாவின் தலைநகர் அட்லாண்டாவின் மேயர் கெய்ஷா லான்ஸ், கெம்ப்பின் உத்தரவுக்கு எதிராக முகக் கவசத்தை கட்டாயமாக்கியுள்ளார்.