கோலாலம்பூர்: மலேசிய பிரிபூமி பெர்சத்துக் கட்சியின் தலைவர் பதவியை பிரதமர் முகைதீன் யாசின் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் அதிகாரபூர்வமற்ற தலைவர் பதவிக்கான போட்டியில் அவர் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒரே வேட்பாளரான அஹமட் ஃபைசால் அசுமுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் பெர்சத்துக் கட்சியின் தேர்தல் நடைபெற விருக்கும் வேளையில் இரு தலைவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
பெர்சத்துக் கட்சியின் இணையத்தளத்தில் இந்த இரு உயர்மட்ட பதவிகளுக்கு தலா ஒரே வேட்பாளர் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
இது பற்றி பெர்னமா கேட்டபோது, ஆகஸ்டு மாதம் நடை பெறும் கட்சித் தேர்தலுக்குப் பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பெர்சத்துக் கட்சியின் தேர்தல் குழுவின் தலைவர் சையது ஹமீது சையது ஜஃபார் அல்பார் கூறியுள்ளார்.
"தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு அதிகாரபூர்வமாக எந்த வேட்பாளரும் போட்டியிடவில்லை. வேட்பாளர் மனுத் தாக்கலுக்கான அவகாசமும் முடிந்துவிட்டது. இருந்தாலும் உட்கட்சித் தேர்தல் முடிந்தவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்," என்று மேலும் அவர் கூறினார்.

