உலகம் முழுவதும் சனிக்கிழமை நிலவரப்படி 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 260,000 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொள்ளைநோய் பரவத் தொடங்கியது முதல் ஒரே நாளில் 259,848 பேர் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்ற உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதற்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை பதிவான 237,743 கிருமித்தொற்று சம்பவங்களே ஆக அதிகம் என்றிருந்த நிலையில் புதிய எண்ணிக்கை அதையும் மிஞ்சிவிட்டது.
மேலும், ஒரே நாளில் கால் மில்லியன் பேருக்கு மேல் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதும் இதுவே முதல் முறை என்றது நிறுவனம். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பதிவான நோய்த்தொற்று எண்ணிக்கை ஆக அதிகமாக இருந்ததே உலகளவிலான எண்ணிக்கை வேகமாக உயரக் காரணம் என்றது அது.
வெள்ளிக்கிழமை வரையிலான நிலவரப்படி 100 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் 71,484, பிரேசிலில் 45,403, இந்தியாவில் 34,884, தென்னாப்பிரிக்காவில் 13,373 என்று புதிதாக தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.
புதிய எண்ணிக்கை மூலம் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மில்லியன் பேர் ஆயினர். அதற்கு முதல் நாளான வியாழக்கிழமை பிரேசிலின் தொற்று எண்ணிக்கை இரண்டு மில்லியனைக் கடந்தது.
மரணமடைந்தோர் எண்ணிக்கையும் சாதனை அளவைத் தொட்டிருக்கிறது. மே 10ஆம் தேதிக்குப் பிறகு ஒரே நாளில் 7,360 பேர் உயிரிழந்ததாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. ஜூன் மாதம் முழுவதும் சராசரியாக தினமும் 4,600 பேர் உயிரிழந்த நிலையில் இந்த மாதம் அந்த விகிதம் 4,800ஆக அதிகரித்துவிட்டது.
மேலும், அன்றைய கணக்குப்படி மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 மில்லியனைக் கடந்து 14.3 மில்லியானகிவிட்டது. கிருமிப் பரவத் தொடங்கிய ஏழு மாதங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 600,000க்கும் மேல் அதிகரித்துவிட்டது. இதுவரை மாண்டோரில் கால்வாசிப் பேர் (25 விழுக்காடு) அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
அமெரிக்காவின் பல மாநிலங்களில், குறிப்பாக தென்மாநிலங்களில் கிருமிப் பரவல் வேகம் அதிகமாக உள்ளது. முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயத்தையும் முடக்கத்தையும் தொடக்கத்திலேயே செய்யத் தவறியதால் அம்மாநிலங்கள் இப்போது பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
ஃப்ளோரிடா, டெக்சஸ், அரிஸோனா ஆகிய மாநிலங்களில் கிருமித்தொற்றுகளின் எண்ணிக்கை பலமடங்கு பெருகி வருகிறது. இவற்றுள் ஃப்ளோரிடாதான் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. சனிக்கிழமை மட்டும் இம்மாநிலத்தில் 10,000 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்ய்பபட்டதுடன் 90 பேர் உயிரிழந்தனர்.
மொத்தமாக, அந்த மாநிலத்தில் 337,000 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. 5,000 பேர் வரை மாண்டுவிட்டனர்.
இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளில் கிருமிப் பரவல் வேகம் அதிகரிப்பு