ஜகார்த்தா: கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்களில் சீனாவை இந்தோனீசியா மிஞ்சிவிட்டது.
ஒரே நாளில் 1,639 புதிய தொற்று சம்பவங்கள் பதிவானதைச் சேர்த்து நேற்றைய நிலவரப்படி, இந்தோனீசியாவில் 86,521 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் 16 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதியாகின. இவற்றைச் சேர்த்து அங்கு மொத்தம் 83,660 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது.
கிருமிப் பாதிப்பால் மேலும் 127 பேர் இந்தோனீசியாவில் உயிரிழந்துவிட்டனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மொத்தம் 4,143 பேர் அங்கு கிருமித்தொற்றுக்கு பலியாகிவிட்டனர். கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பான ஆக அண்மைய சுகாதார வழிகாட்டு குறிப்புப்படி, கொவிட்-19 என்று சந்தேகிக்கப் படுவோர் இறப்பதும் கொவிட்-19 உயிரிழப்பாகக் கருதப்படுகிறது.
இருப்பினும் அண்மையில் உயிரிழந்தோரில் உறுதிசெய்யப்பட்ட கொவிட்-19 நோயாளிகளும் உறுதி செய்யப்படாத கொவிட்-19 நோயாளிகளும் உள்ளனரா என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை.
தென்கிழக்காசிய நாடுகளில் இந்தோனீசியாவில் ஆக அதிகமான கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கு அடுத்த நிலையில் 67,456 கிருமித்தொற்று சம்பவங் களுடன் பிலிப்பீன்ஸ் இடம்பெற்று உள்ளது.
அவசர செயல்பாட்டு நிலையை குறைக்கிறது பெய்ஜிங்
கொவிட்-19 கிருமிக்கு எதிரான அதன் அவசர செயல்பாட்டை, பெய்ஜிங் இரண்டாவது நிலையிலிருந்து மூன்றாவது நிலைக்கு குறைப்பதாக நேற்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
கிருமித்தொற்று தொடர்பில் அடுக்கடுக்காக பல சம்பவங்கள் பதிவானதை அடுத்து ஜூன் 16 அன்று இரண்டாவது அவசர செயல்பாட்டு நிலை அறிவிக்கப்பட்டது.
கடந்த 13 நாட்களாக பெய்ஜிங்கில் புதிய தொற்று சம்பவங்கள் ஒன்றுகூட பதிவாகவில்லை.