பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் நான்கு நாட்களாக பேச்சு நடத்தி ‘கொவிட்-19’ மீட்புத் திட்டத்தில் உடன்பாடு கண்டுள்ளனர்.
கிருமித்தொற்றுக்குப் பிறகு பொருளியல் பாதிப்பிலிருந்து நாடுகளை மீட்டெடுக்க மானியமாகவும் கடனாகவும் வழங்க 750 பில்லியன் யூரோ (1.2 டிரில்லியன் வெள்ளி) மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
‘ஐரோப்பாவுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய தருணம் இது,” என்று உச்சநிலை மாநாட்டின் தலைவர் சார்ல்ஸ் மைக்கல் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரஸ்ஸல்ஸில் கூடிய ஐரோப்பிய தலைவர்கள் பொருளியல் மீட்பு திட்டம் குறித்து விவாதித்தனர்.
நான்கு நாட்களாக நீடித்த பேச்சு வார்த்தையில் கிருமித் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் செலவுகள் குறித்து கவலை தெரிவித்தன.
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 390 யூரோ மானியம் வழங்குவது பற்றியும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
சுவீடன், டென்மார்க், ஆஸ் திரியா, நெதர்லாந்து ஆகியவற்றுடன் பின்லாந்தும் சேர்ந்து கிருமிப் பரவலால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 500 பில்லியன் யூரோவை மானியம் வடிவில் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரி வித்தது.
நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட் தலைமையிலான இந்தக் குழு, 375 பில்லியன் யூரோ என அதற்கு வரம்பு விதித்தது.
ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகள் மானியம் 400 பில்லியன் யூரோவுக்கு மேல் குறையக் கூடாது என்று வலியுறுத்தின.
வெள்ளிக்கிழமை தொடங்கி சுமார் 90 நிமிடங்கள் நீடித்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு உடன்பாடு எட்டப்பட்டது.
கடந்த 2000ஆம் ஆண்டில் பிரான்சின் நைஸ் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்போதுதான் ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றில் தலைவர்கள் நீண்டநேரம் விவாதித்துள்ளனர். அந்த சமயத்தில் ஐந்து நாட்கள் பேச்சு வார்த்தை நீடித்தது.
இருப்பினும் மீட்புத் திட்டத்தில் உள்ள மற்ற அம்சங்களை ஒன்றியத் தலைவர்கள் முடிவு செய்ய வேண்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும்.