கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூடுதலாக 1.69 பில்லியன் ரிங்கிட் (S$550 மில்லியன்) வரி செலுத்த வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாட்சியங்களை விசாரிக்காமல் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த 2019 ஜூன் 25ஆம் தேதியன்று, மலேசிய அரசாங்கம் உள்நாட்டு வருவாய் வாரியம் மூலம், நஜிப் மீது மொத்தம் 1.69 பில்லியன் ரிங்கிட் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்த நாளிலிருந்து ஆண்டுக்கு 5 விழுக்காடு வட்டி, அத்துடன் செலவுகள் மற்றும் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்படும் பிற நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வழக்கு தொடுத்தது.
மேலும் அத்தொகையை செலுத்த நஜிப்பிற்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டபோதும் அவர் அதை செலுத்த தவறிவிட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே ஆண்டு ஜூலை மாதம் நஜிப் வரி மதிப்பீடு தொடர்பான மேல்முறையீட்டிற்கு விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
இதனையடுத்து, அவர் மீதான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.
1எம்டிபி தொடர்பான ஐந்து ஊழல் வழக்குகளையும் நஜிப் எதிர்நோக்கியுள்ளார்.
அதில் முதல் வழக்கான 1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சியின் நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கு விசாரணை கடந்த மாதம் முடிவடைந்தது. இந்த வழக்கில் வரும் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
பிப்ரவரியில் ஏற்பட்ட அதிரடி அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, நஜிப்பின் அம்னோ கட்சி ஆளும் நிர்வாகத்திற்குத் திரும்பியுள்ளது, தற்போது நடைபெற்று வரும்
1எம்டிபி ஊழல் வழக்குகள் மற்றும் விசாரணைகள் குறித்து கவலையைத் தூண்டியுள்ளது.

