சிட்னி: ஆஸ்திரேலியாவில் புதிதாக 502 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
எனவே கொவிட்-19 கண்டறியப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் கிருமித்தொற்று உச்சமடையத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி ஒரே நாளில் 459 பேர் தொற்றுக்கு ஆளானதே அதிகமாக இருந்தது.
நேற்று பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் (484 பேர்) விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலியாவில் மொத்தம் 13,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 128 பேர் மாண்டனர்.
இதற்கிடையே, கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக மெல்பர்ன் நகர பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் ‘மக்கள் நடவடிக்கையில் மேலும் மாற்றங்கள் வேண்டும்’ என்று விக்டோரியா மாநில தலைவர் ஆண்ட்ரூஸ் கூறினார்.
கடந்த இரண்டு வாரங்களில் கொவிட்-19 உறுதி செய்யப்பட்ட 10ல் ஒன்பது பேர், தங்களுக்கு அறிகுறிகள் தென்பட்டதற்கும் கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருந்த காலகட்டத்திற்கும் இடையே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்று பகுப்பாய்வு ஒன்று தெரிவிப்பதைச் சுட்டிய அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் மெல்பர்னில் கிருமிப் பரவல் எவ்வாறு அதிகரித்தது என்பது குறித்த விசாரணையில், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களைத் தனிமைப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட தங்கு விடுதிகளில் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் மீறப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே நியூ சவுத் வேல்சில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அம்மாநில தலைவர் கிளாடிஸ் பெரெஜிக்லியன், இனி வரும் வாரங்கள் மிகவும் நெருக்கடியான காலகட்டமாக இருக்கும் என்றார்.