கோலாலம்பூர்: 1எம்டிபி மோசடி தொடர்பான முதல் ஊழல் வழக்கிற்கான தீர்ப்பு நாளை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1எம்டிபி மோசடியில் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கிற்குத் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய கிட்டத்தட்ட 16 மாதங்களுக்கு முன்பு விசாரணை தொடங்கியது.
மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான 1எம்டிபி நிதியிலிருந்து திரு நஜிப்பும் அவருடன் நெருக்கமான சிலரும் கையாடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 1எம்டிபி நிதியிலிருந்து கையாடல் செய்த பணத்தை அவர்கள் ஹாலிவூட் திரைப்படம் ஒன்றை எடுக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க முதலீட்டு நிறுவனமான கோல்ட்மன் சேக்ஸ் நிறுவனமும் இந்த மோசடியில் சிக்கியது. 1எம்டிபி நிதியிலிருந்து பெரும் அளவிலான பணம் கையாடல் செய்யப்பட்ட செய்தி வெளியானதும் மலேசியர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. அதன் விளைவாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் அப்போது நஜிப் தலைமையில் இருந்த தேசிய முன்னணி கூட்டணி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.
அதற்கு முன் ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு அந்தக் கூட்டணி ஆட்சியில் இருந்தது.
தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து திரு நஜிப் கைது செய்யப்பட்டார். 1எம்டிபி மோசடி தொடர்பாக அவர் மீது பல குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
1எம்டிபி மோசடி தொடர்பாக திரு நஜிப் மூன்று வெவ்வேறு வழக்குகளை எதிர்கொள்கிறார். இந்நிலையில், முதல் வழக்கிற்கான தீர்ப்பு நாளை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திரு நஜிப்புக்குச் சொந்தமான வங்கிக் கணக்கிற்கு 1எம்டிபியின் எஸ்ஆர்சி பிரிவிலிருந்து 42 மில்லியன் ரிங்கிட் மாற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரிக்க இந்த வழக்கு நடத்தப்பட்டது. தம்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திரு நஜிப் மறுத்துள்ளார். திரு நஜிப்புக்குச் சாதகமாக தீர்ப்பு அமையும் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் திரு நஜிப்பின் வழக்கறிஞர் திரு சஃபி அப்துல்லா நம்பிக்கை தெரிவித்தார்.
ஊழல் தொடர்பாக நான்கு குற்றச்சாட்டுகளையும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது தொடர்பாக மூன்று குற்றச்சாட்டுகளையும் திரு நஜிப் எதிர்நோக்குகிறார். தமது வங்கி கணக்கிற்கு 1எம்டிபிக்குச் சொந்தமான பணம் மாற்றப்பட்டது குறித்து தமக்கு ஏதும் தெரியாது என்று திரு நஜிப் கூறியுள்ளார்.
1எம்டிபி மோசடிக்கு ஜோ லோ என்று அழைக்கப்படும் திரு லோ தேக் ஜோதான் மூலக் காரணம் என்பதே திரு நஜிப் தரப்பின் வாதம்.

