மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாநிலமான விக்டோரியாவில் அன்றாட கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு நேற்று 459 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின என்றும் கடந்த 24 மணிநேரத்தில் அங்கு பத்து மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் அதுவே ஆஸ்திரேலியாவில் ஒரு நாளில் நிகழ்ந்த ஆக பெரிய கிருமித்தொற்று மரண எண்ணிக்கை என்றும் அம்மாநிலத்தின் முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதற்கு முன் கடந்த புதன்கிழமையன்று அங்கு புதிய உச்சமாக 483 சம்பவங்கள் பதிவாகின. நேற்று முன்தினம் கிருமித்தொற்று எண்ணிக்கை 357.
முதியோர் இல்லம், சுகாதாரப் பராமரிப்பு வசதிகள், பெரிய விநியோக நிலையங்கள், இறைச்சிக்கான விலங்குகளை வெட்டுமிடங்கள், குளிர்பதனக் கூடங்கள், சரக்குக் கிடங்குகள் போன்ற வேலையிடங்களில் நிகழும் பரவும் தொற்றே இதற்கு முக்கிய காரணம் என்றும் திரு ஆண்ட்ரூஸ் விவரித்தார்.