கோலாலம்பூர்: பிரதமர் பதவி ஒப்படைக்கப்படும் எனக் கூறி தாம் டாக்டர் மகாதீரால் பலமுறை ஏமாற்றப்பட்டதாக பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வேதனையோடு கூறியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் பதவியை டாக்டர் மகாதீர் தம்மிடம் ஒப்படைப்பார் என தாம் உறுதியாக நம்பியதாக அவர் சொன்னார்.
"தொடக்கத்தில் இது எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் இப்போது புரிகிறது," என மலேசியாவின் 'சின் சியூ' சீன நாளிதழுக்குப் பேட்டி அளித்த அன்வார் கூறினார்.
"பிரதமர் பதவியை ஒப்படைக்கப்போவதாகக் கூறும் தேதியை டாக்டர் மகாதீர் மாற்றிக்கொண்டே இருந்து இறுதியில் இவ்வாண்டு நவம்பர் நடைபெறவிருக்கும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டிற்குப் பிறகு பதவி விலகப் போவதாக சொன்னார்.
"ஆனால், பக்கத்தான் ஹரப்பான் தலைவர்களிடம் தெரிவிக்காமலேயே பிப்ரவரி 24ஆம் தேதி டாக்டர் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
"22 மாதங்கள் நீடித்த பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி கவிழ்வதற்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்தது.
"அதோடு பதவியை ஒப்படைப்பதற்கான வாக்குறுதியும் காற்றில் பறந்தது," என அன்வார் ஏமாற்றத்தோடு தெரிவித்தார்.
"டாக்டர் மகாதீர் பதவி விலகாமல் இருந்திருந்தால் பக்கத்தான் அரசாங்கம் இன்னமும் தொடர்ந்து இருந்திருக்கும். உட்கட்சிப் பூசலையும் சரி செய்திருக்க முடியும்.
"பிரதமர் பதவியை தம்மிடம் ஒப்படைத்திருந்தாலும் அரசாங்கம் கவிழ்ந்திருக்காது," என்றும் அவர் சொன்னார்.
"பிகேஆர் மற்றும் பெர்சத்துவில் துரோகிகள் உள்ளனர் என்பது உண்மை. ஆனால் அந்த சூழ்நிலையை நாம் ஏன் உருவாக்கினோம்.
"நான் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளேன். ஏழைகளிடமிருந்து திருடுவோரை நான் வெறுக்கிறேன், " என்று அன்வார் கூறினார்.
தமது குறிக்கோள் பொருளியலைப் பற்றியதுதான் எனத் தெரிவித்த திரு அன்வார், அனைவரும் வெற்றியடையலாம் என்றும் சீன வர்த்தகர்கள் உள்ளிட்ட திறமையானவர்கள் அனைவரையும் ஆதரிக்கவேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டுள்ளதாகவும் கூறினார்.

