பல ஆசிய நாடுகளில் கொரோனா கிருமித்தொற்றின் இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடி வரும் வேளையில், பல நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கத் தொடங்கியுள்ளன.
சீனா உட்பட ஆஸ்திரேலியா, வியட்னாம், ஹாங்காங் போன்ற நாடுகளில் கடந்த சில வாரங்களாகக் கிருமித்தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது.
வியட்னாம்
வியட்னாமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான டானாங் நகரில் மூன்று பேருக்கு இவ்வார இறுதியில் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே அந்நாடு மீண்டும் உச்சகட்ட விழிப்புநிலைக்குத் திரும்பியது.
இதையடுத்து, டானாங் நகரில் இருந்து சுமார் 80,000 பேர் வெளியேற்றப்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் வீட்டிலேயே தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்
ஹாங்காங்கில் நேற்று தொடர்ந்து 5வது நாளாக 100க்கும் மேற்பட்ட கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி வருவதால், அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
முதன்முறையாக உணவகங்களில் அமர்ந்து உணவருந்த ஹாங்காங் தடை விதித்துள்ளது.
இதுதவிர இருவருக்கு மேல் கூடுவதற்குத் தடை, அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
நேற்று அறிவிக்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் புதன்கிழமை முதல் ஏழு நாட்களுக்கு நடப்பில் இருக்கும். ஹாங்காங்கில் இதுவரை 2,600 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனா
இதற்கிடையே சீனாவில் வூஹான், பெய்ஜிங்கைத் தொடர்ந்து தற்போது ஸின்ஜியாங் பகுதியில் கிருமிப் பரவல் அதிகரித்துள்ளது. சீனாவில் திங்கட்கிழமையன்று 61 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும்.
பாதிக்கப்பட்டவர்களில் 57 பேர் ஸின்ஜியாங் பகுதியையும் 14 பேர் லியோனிங் பகுதியையும் சேர்ந்தவர்கள். எனவே அப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா
அதேபோல், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை ஒவ்வோர் நாளும் உச்சமடைவதால் தற்போதுள்ள ஆறு வார முடக்க உத்தரவு மேலும் நீட்டிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் கிருமித்தொற்றால் ஏற்படும் மரணங்களும் அங்கு அதிகரித்துள்ளன.
மலேசியா
மலேசியாவில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 10க்கும் மேல் பதிவாகி வருவதால், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மீண்டும் அறிவிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கொரியா, பாப்புவா நியூகினியாவிலும் கிருமிப் பரவல் நித்தமும் உச்சமடைந்து வருகிறது.