கோலாலம்பூர்: சாலை போக்குவரத்து சட்டத் திருத்த மசோதா முதல் வாசிப்புக்காக நேற்று மலேசிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங், இந்த திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி மற்றவருக்குக் காயம் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகன ஓட்டுநர்களுக்கு கடும் தண்டனையை விதிப்பதற்கு இந்த சட்ட திருத்த மசோதா வழிவகை செய்கிறது.
அதோடு தொடர்ந்து இக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கான தண்டனை மற்றும் அபராதத்தையும் இந்த திருத்தம் அதிகரிக்கிறது.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தினால் ஏற்கெனவே உள்ள இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை இப்போது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்படும். அதோடு 20,000 ரிங்கிட்டாக இருக்கும் அபராதம் 50,000 ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும்.
அடுத்தடுத்து இதே குற்றங்களைப் புரிவோருக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
50,000 முதல் 100,000 ரிங்கிட் வரை அபராதத் தொகை அதிகரிக்கும்.
மேலும் வாகன ஓட்டுநர் உரிமம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை ரத்து செய்யப்படுவதற்கும் மசோதா வழி வகுக்கிறது.
இந்த மசோதாவின் இரண்டாவது வாசிப்பும் தற்போதைய நாடாளுமன்ற தொடரிலேயே தாக்கல் செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

