செங்டூ: சீனத் தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிரான சீனாவின் பதிலடியால் செங்டூவில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் மூடப்பட்டு அமெரிக்கக் கொடி நேற்று கீழே இறக்கப்பட்டது.
அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள பகுதி போலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தூதரகத்தில் இருக்கும் பொருட்கள் உள்ளிட்டவற்றைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனா அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையைத் திருட முயல்வதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் மற்றும் சில சீன நிறுவனங்களை மூட அவர் உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அனைத்துலக சட்டம், சீன-அமெரிக்கத் தூதரக மாநாட்டின் விதிமுறைகளை அவமதிப்பதாகக் குறிப்பிட்ட சீனா தனது நாட்டில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை மூடியது.