கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் தொடர்பான முதல் வழக்கின் ஏழு குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், 1 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகையை செலுத்தியுள்ளார்.
இதோடு தன் மீதான அனைத்து வழக்குகளிலும் பிணைத் தொகையாக நஜிப் இதுவரை 7 மில்லியன் ரிங்கிட் செலுத்தியுள்ளார்.
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவர் மேல் முறையீடு செய்துள்ளதால், தண்டனையை தற்காலிகமாக ஒத்தி வைப்பதற்கு நீதிபதி அனுமதித்தார். எனினும் பிணைத் தொகையாக 1 மில்லியன் ரிங்கிட் செலுத்த உத்தரவிடப்பட்டது.
நேற்று முன்தினம் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு நஜிப்பிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டன.
இதற்கிடையே, நஜிப் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை இழிவுபடுத்தும் முயற்சியாக அவரது ஆதரவாளர்கள், நீதிபதி மொஹமட் நஸ்லான் மொஹமட் கசாலி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
நஜிப் நிதியமைச்சராக இருந்தபோது நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரியாக இருந்த லோக்மன் நூர் ஆடம், உயர்நீதிமன்றம் 'அரசியல் ரீதியிலான முடிவை' எடுத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
நஜிப்பின் தீவிர ஆதரவாளரான அரசு சாரா அமைப்பை வழிநடத்தும் திரு ரமேஷ் ராவ் என்பவர் நீதிபதி நஸ்லான் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுவின் பேரன் என்று கூறினார்.
ஆனால், இந்தக் கூற்று முற்றிலும் அடிப்படையற்றது என்று முக்ரிஸ் மகாதீர் மறுத்துள்ளார்.

