சிட்னி: சிட்னி கொரோனா தொற்றின் மையமாக உருவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நகரத்துடனான எல்லையை குயின்ஸ்லாந்து மாநிலம் மூடுகிறது.
மெல்பர்னில் இருந்து குயின்ஸ்லாந்து சென்ற இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு வரும் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும்.
குயின்ஸ்லாந்து திரும்பிய அவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தும் உத்தரவைக் கடைப்பிடிக்க தவறிவிட்டதாகவும் ஊர் திரும்பிய எட்டு நாட்களுக்குப் பிறகு அவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் நேற்று 384, நியூ சவுத் வேல்சில் 19 கிருமித்தொற்று சம்பவங்களும் பதிவாகின.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மெல்பர்ன் நகரில் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கிருமிப் பரவல் அதிகரித்துள்ளது.
எனவே, பேரழிவு மண்டலங்களுக்கு அனுப்பப்படும் பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவக் குழுக்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் மெல்பர்ன் நகருக்கு அனுப்பியுள்ளது.