மணிப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் ஒருவர் பலியாகி உள்ளார். இதன்மூலம் கொவிட்-19 நோய் அங்கு தனது பலி கணக்கைத் துவங்கி உள்ளது.
தாபோல் மாவட்டத்தைச் சேர்ந்த 56 வயதான ஆடவர் கிருமித் தொற்று உறுதியானதை அடுத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
22ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு 26ஆம் தேதி கொவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே மணிப்பூரில் எந்தவிதப் பயணத் தொடர்பும் இன்றி பலர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அங்கு கடந்த 23ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 2,317 பேர் கொவிட்-19 நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர்களில் 1,615 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மணிப்பூர் சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.