அமெரிக்காவில் நிமிடத்திற்கு ஒருவர் கிருமித்தொற்றுக்குப் பலியானதாக ராய்ட்டர்ஸ் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
நேற்று (புதன்கிழமையன்று) அமெரிக்காவில் 1,456 பேர் பலியாகினர். இதுவரை பதிவான தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையில் இது ஆக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் மே 27ஆம் தேதி 1,484 என்று பதிவான உயிரிழப்பே அதிகமாக இருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டியது.
கடந்த மூன்று வாரங்களாக உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததையடுத்து, கடந்த 11 நாட்களில் 10,000 பேர் மாண்டனர்.
ஆனால் சில வாரங்களாக தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தாலும் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4.4 மில்லியனாக உள்ளது.
குறிப்பாக அரிசோனா, டெக்ஸாஸ், ஃபுளோரிடா, கலிஃபோர்னியா நகரங்களில் கிருமிப் பரவல் அதிகரித்ததால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
இந்த மாதத்தில் இதுவரை அதிகபட்சமாக டெக்சஸில் 4,300 பேரும், அடுத்து ஃபுளோரிடாவில் 2,900 பேரும், கலிபோர்னியாவில் 2,700 பேரும் மாண்டனர்.
ஆனால் ஒட்டுமொத்த மரண எண்ணிக்கை என்று பார்க்கும்போது நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாநிலங்களில்தான் அதிக உயிரிழப்பைச் சந்தித்துள்ளன.
அமெரிக்காவின் மக்கள்தொகையில் ஒவ்வோர் நூறாயிரத்திற்கும் 45 மரணங்கள் நிகழ்கின்றன.
அதன் அடிப்படையில் கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 20 நாடுகளில், அமெரிக்கா ஆறாவது இடத்தில் உள்ளது.
பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, பெரு மற்றும் சிலி ஆகிய நாடுகள் முந்திய ஐந்து இடங்களில் உள்ளன.
இதற்கிடையே, புயல் காரணமாக ஃபுளோரிடாவில் கிருமித்தொற்று பரிசோதனை மையங்களை மூடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வார இறுதியில் மணிக்கு 80 கிலே மீட்டர் வேகத்தில் இசயாஸ் புயல் தாக்கக்கூடும் என்று தேசிய சூறாவளி மையம் தெரிவித்தது. எனவே உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை 5 மணியோடு, அடுத்த அறிவிப்பு வரும் வரை பரிசோதனை மையங்களை மூடுவதாக அதிகாரிகள் கூறினார்கள்.