புதுடெல்லி: கொவிட்-19 நோயால் தாக்கப்பட்ட 105 வயது மூதாட்டி அதிலிருந்து மீண்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரபியா ஹமாடியா என்ற அந்தப் பெண்மணி ஜூலை 15ஆம் தேதி நொய்டா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அல்ஜிமர் எனப்படும் ஒருவகை மறதி நோய் உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தனது உறவினர்களை கூட அடையாளம் காணமுடியாத நிலையில் இருந்துள்ளார்.
“ரபியாவின் வயது, மொழி, மறதிநோய் என அனைத்துமே சவாலாக இருந்தன. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற அவருக்கு சுவாசக் கோளாறும் இருந்தது.
“எனினும் அடுத்த ஒரு வாரத்திற்கு அதிக புரதச்சத்துள்ள உணவுடன் கூடிய தீவிர சிகிச்சையால் அவர் மெல்ல மீண்டார்,” என்கிறார் அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் அபிஷேக்.
தற்போது சக்கர நாற்காலியில் அமரும் அளவுக்கு உடல்நலம் தேறியுள்ள ரபியாவுக்கு, தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே நினைவில் இல்லையாம்.